மனிதம்

chennai floods
அணி வகுத்துச் செல்லும்
எறும்புப் படையை அதிரடியாய்
மிதியாமல் தாண்டிச் செல்லல்
மனிதம்!

கல்லிடுக்கில் நீரின்றி
வாடும் பயிருக்கு நீர்
வார்த்தல் மனிதம் !
கல்வி மறுக்கப் பட்ட
கடை நிலை மாந்தருக்குத்
தம் பெரேனும் படிப்பித்தல்
மனிதம் !

காசுக்குச் சலாம் போடும்
காவலனையும்; மனிதனாய்
நடத்துதல் மனிதம் !
காசுக்காய் இல்லாமல்
மனிதருக்காய் ஒரு நாளில் ஒரு முறையேனும் உபகாரம்
செய்தல் மனிதம் !
அன்புக்காய் ஏங்கும் இதயத்தை
அடையாளம் கண்டு கொண்டு
உள்ளத்தில் ஊற்றெடுக்கும்
அன்பை வார்த்தல் மனிதம் !
ஆத்திரத்தில் அறிவிழந்து
வார்த்தைகளைக் கொட்டி விட்டு
அடடா என வருந்தும் அறிவிலிகளை மன்னித்தல் மனிதம் !
றைவனைத் தொழுகையில்
தன் சுற்றத்திற்கு மட்டுமின்றிப்
பரிதவிக்கும் பிற உயிர்களுக்கும் பிரார்த்தித்தல் மனிதம் !
நித்தம் நித்தம் காணும்
பிச்சைக் காரனுக்குப்
பத்துக் காசுடன்
புன்னகையும் ஈதல் மனிதம் !
சுமை பகிர ஓர் உயிரின்றிச்
சோகத்தில் தவிக்கும்
சக உயிருக்கு நேசக்கரம்
நீட்டல் மனிதம் !
புனிதமான மனிதத்தைப்
புவிதனிலே தேடித் தேடிப்
புரிந்து கொண்டதைப்
புரிந்து கொள்ளல் மனிதம் !
ஆயிரம் மனிதர்கள் மரிக்கலாம்
ஆனால்,
மனிதம் மரித்து விட்டால்
மனித வாழ்வில் பொருளில்லை!

சென்னைப் பெருமழையில்,
மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்ற நிஜம்
நிரூபணமாயிற்று!

7.12.15

Comments

Popular posts from this blog

TEACHER AMMA

Taxing taxes

Is Consumerism becoming the spice of life?